Wednesday, September 12, 2012

5. சுந்த்ராஜும் , நேருவும் !!!

                   கால் மாற்றி கால் மாற்றி நின்றார். மனசு ஆற மாட்டேங்குது . ஒருத்தருக்கும் இவர் தவிப்பு புரியல்ல!  இல்லன்னா ,"நீயும் வா. கொஞ்ச நேரந்தானேனு  கூப்பிட்டிருப்பாங்கல்ல ? ."   "ஒரு மணி நேரத்தில இங்க  கொள்ள போறதுக்கு என்ன இருக்கு ? அடகு வச்ச ரெண்டு பிஞ்சு போன மூக்குத்தி ,கம்மலும், நாலு ரெட்டை வட செயினும்தான் இருக்கு . இதுக்கு ஒரு காவக்காரன்தான் கேடு ."

                   











                  சுந்தரராஜன் கிராம கூட்டுறவு வங்கிக்  காவலாளி .  ஜவஹர்லால் நேருவை வரவேற்க ஜில்லாவே ஒரு வாரமாக ஒரே கொண்டாட்டமாக இருந்தது . வங்கி ஊரின் எல்லையில் இருப்பதால் காவல் அவசியம் . இவருக்கு வேலையில் சேர்ந்த புதிது . அதனால் தனக்கு அன்று வேலை நாள் ,தான் வேலைக்கு சென்றாக வேண்டும் என்று தோணவேயில்லை. காலையில் கணக்குபிள்ளை கூப்பிட்டனுப்பி ,
" ஏய் ! சுந்த்ராஜு ! நீ பாட்டுக்க நேரை பாக்கறேன் ! கீரை பாக்கரேன்ட்டு போயிராதப்பு ! பிரசெண்டு நாயிக்கரு பிச்சுப்புடுவாரு !அம்புட்டுதான் சொல்லுவேன் . ஆமா !!""

               கணக்கப்பிள்ளை சொன்ன பிரசெண்டு நாயக்கரின் பெயரும்
சுந்தரராஜன் தான் ! நம்ம போத்தி  நாயக்கரின் சின்ன அல்லுடு !(மருமகன்) அவரின் காலம் மட்டும் அவர்தான் பிரசிடென்ட் ஆகவும், ஜில்லா கவுன்சிலர் ஆகவும் மாற்றி மாற்றி இருந்தார்.   அவர் உயரமும் , ஆகிருதியுமாக தெருவில் வரும்போதே படியில் உட்கார்ந்து வெட்டி கதை பேசுபவர்கள் எல்லாம் மெல்ல வீட்டினுள்ளும் , பக்கத்து சந்திலும் புகுந்து விடுவார்கள்.. கம்பீரமான தன் சத்தத்திலேயே எதிராளியை   சாய்த்து விடுவார் .

                        நம்ம  சுந்த்ராஜுக்கு ஆறவேயில்லை !  உள்ளே உதறினாலும் நேரே சுந்தரராஜ நாயக்கரிடம் போய்  விட்டார்.!

#ஏமிரா ? *# ...............#எண்ணா !!!....*#    .......#செப்பு ஏமி ? *# .......#.ஏமி  ரேது!*#
என்னடா?                     அண்ணே!                      என்ன சொல்லு?       ஒண்ணுமில்லே!


" பின்ன என்ன ? போ !! போயி இரு ! ஊர் பக்கம் வேடிக்க பாக்க வந்துராதே!''

''செரிண்ணா !!''   பேசாம வாயை  மூடிக்கொண்டு  வந்து  விட்டு  இப்போது புலம்பித் தவித்துக் கொண்டிருந்தார் .

(""இந்த இடத்தில திருப்பி முதல் பாராவ படிங்க ")

நன்கு இருட்டிவிட்டது . யாராவது வந்து தன்னை அழைப்பார்கள் என ஒரு மூலையில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும்  போய் விட்டது. இனி என்னத்த என்று எரிச்சலுடன் வாசலில் இருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார் . இனி அவரின் வார்த்தைகளில் .............

                                     "மூணு  பிளசர் வண்டி  சர்ர்ருன்னு போச்சு. எனக்கா வயத்தெரிச்சல் ! இருந்திருந்து  எப்படியாப்பட்ட ஒரு ஆளு ஊருக்கு வர்றாரு ! நா  பொறந்த நேரம் சரி இல்ல! இல்லன்னா அங்க அப்படி கேவலப்பட்டு உக்காருவனா ?'' அதனால போன பிளசர் காரை திரும்பி கூட பாக்கலை . அப்பிடியே  உட்கார்ந்தவன்  அரவம் கேட்டு நிமிந்து பார்த்தா அங்க வந்து நின்ன பிளசர்ல இருந்து வளத்தின்னா வளத்தி அப்படி ஒரு வளத்தி , கருப்புன்னா கருப்பு அப்பிடி ஒரு கருப்பு , நேரா என்ன பாத்து வந்தவர பாத்து  எனக்கே தெரியாம எந்திருச்சு நின்னுட்டேன் !!

"தம்பி இங்கன ஒதுங்க இடம் இருக்கு?'' !

 "ஆமா ,பின்னாடி இருக்கு ! ''

அவர் பின்னாடி திரும்பி வண்டிய பார்த்து  தலையை ஆட்டி ஜாடை காமிச்சார் .

            அவ்வளவுதா!!, வண்டியில இருந்து சும்மா சாட்டை மாதிரி எறங்கி வராரு!!  பார்த்த உடனே எனக்கு ஜொரம் வந்துருச்சு ! தீ மாதிரி இருக்கறாரு !! சாமி மாதிரி கிட்ட வந்து நிக்கிறாரு!! அவர   பின்னாடி கூட்டிட்டு போனது, கக்கூஸ் கதவு திறந்து விட்டு வாளியில தண்ணி மொண்டு வச்சது , போறப்ப அவரு என்ன முதுகில தட்டிட்டு போனது , மொதல்ல வந்து பேசுன வளந்தவரு சிரிச்சதுனு எல்லாமே
நிமிசமா முடிஞ்சு போச்சு!


 மின்னாடி  போன வண்டி எல்லாம் பின்னுக்கயே (reverse )கிட்ட வந்துருச்சு . 

எல்லா வண்டியும் ஊர் பக்கமா கிளம்பி போனப்பறம் என்னால தரையில நிக்க முடியல !!

"சாலுரா சுந்த்ராஜு , இக்க ஏமிரா ஈ பத்துகுல "னு (போதும்டா  சுந்த்ராஜு, இனி என்னடா வேணும் இந்த பிறவியில)  ஆகிபோச்சு .


 ( இந்த கதையை முதலில் சொன்ன  போது சுந்தராஜ் தாத்தாவின்  வயது 60 க்கு மேல் .என் வயது 10அல்லது 12 தான்.ஆனால் எத்தனை தடவை இந்த கதையை கேட்டேன் என்பது என் நினைவில் இல்லை . கல்லூரியில் படிக்கும் போது கூட,  ஒரு தடவ ''அவரை பார்த்த  கதையை சொல்லுங்க'' ன்னு கேட்டிருக்கிறேன் .')


            எப்போது அவர் இந்த கதை சொன்னாலும் சொல்லி முடித்தவுடன் கேட்பார் !  "செப்பு நுவ்வு நிஜம் அண்டவா? ரேதா? (சொல்லு நீ நிஜம்னு சொல்றியா ?இல்லையா?) என்பார். பக்கத்தில் கேட்கும் பெரியவர்கள் நக்கலாக சிரிப்பார்கள் . பாவம்  யாருமே அவர்  சொல்வதை கடைசிவரை ஒத்து கொள்ளவேயில்லை .  ஆனால் அவரும் சளைக்கவில்லை . வருத்தப்படவும் மாட்டார் .

             அப்பாவிடம் சொன்னேன் ,"நிஜமாதான்பா இருக்கும் !".
 அப்பா சிரித்துக்கொண்டார் .

                  ஆனால் எனக்கு உண்மை என்றே தோன்றுகிறது.
நேருவிடமும், காமராஜரிடமுமா  போய் கேட்க முடியுமா ? கேட்கவே முடிந்தாலும்  எப்படி கேட்பது!!! ?

1 comment:

  1. கொடுக்கும் போது தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும்.

    ReplyDelete