Saturday, September 22, 2012

7. ரங்கூன் பாட்டி . PART - 2

                       
      அறுவடை முடிந்த  நெல் ரெண்டு  ஆள் உயரத்திற்கு  அங்கங்கு குவிக்க பட்டு இருந்தது.  சேர்த்து குமிச்சு வச்சா கைலாசநாதர் கரடு உயரம்  குமிக்கலாம் .ரெண்டு மூணு நாளாவே எல்லாரும் கூடி கூடி பேசுறாங்க! ஆம்பளையாளுங்க கூட அழுகிறாங்க !  பாட்டியின்  பெரிய பெண்  லக்ஷ்மம்மாவுடைய பிள்ளைகள் ஒன்பது பேரும் சின்ன குழந்தைகள் ! அதுங்க மட்டும் தான் சந்தோசமா விளையாடுது.தாத்தா  பாட்டிக்கு  மனசுக்குல எவ்வளவோ இருந்தாலும் வெளிய காமிச்சுக்காம இருக்காங்க.

பக்கத்து தோட்டத்தை சேர்ந்த பர்மியர்கள் நிறைய பேர் வந்து ஆறுதல் சொல்லி சென்றனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமாக ஆகிக் கொண்டு வந்தது.  ஜப்பானியர்கள் முன்னேறினர். பிரிட்டிஷ் - இந்திய படைகள் பின்வாங்கின.           



                              பசங்கள்ள அழகர் சாமி தான் பெரியவர் . இருபது சொச்சம்            
வயது....முன்னாலும்  பின்னாலுமாக பதினாறு பேர். இத்தனை பிள்ளைகளை பெற்று அவர்களை  நல்ல முறையில் வளர்த்து,  வயிறு வாடாமல் நேரத்திற்கு சமைத்து போட்டு, மிக   இக்கட்டான அந்த நிலையிலும் கலங்காமல் வளைய வந்த பாட்டியின் உறுதி எவ்வளவு என்று  கற்பனை செய்யக் கூட  முடியவில்லை .
                   "எய்யா அழகர்சாமி , தூத்தல் வொச்சட்ட வுந்தி , தொரக்க போயி கிடுகுலு பெண்டி ஒட்டுலுனு மூசிடுவுப்பா !" (சாரல் விழும்போல இருக்கு . சீக்கிரம் அந்த தட்டிய வச்சு நெல்லை மூடிருப்பா! ) , அம்மாவின் (பாட்டியின்)
குரல் கேட்டவுடன் பசங்க எல்லோருமே ஓடி வந்து அண்ணனுக்கு உதவி செய்தனர் .

       













      தாத்தாவும் , குருசாமியும் உள் அறையில் நெடுநேரமாக பேசிக் கொண்டு இருந்தனர். வெளியே வந்த இருவர் முகத்திலும் ஆயுசே இல்லை. குருசாமியை அனுப்பி விட்டு அடுப்படிக்கு வந்தார் .

"ம்ம்க்க்க்!"

"ஏமி , நீலு காவல?! " (என்ன தண்ணி வேணுமா?)

"இக்க ஏமி  லேதும்மா இக்கட ! " (இனி ஒண்ணும்  இல்லமா இங்க!)  தாத்தாவின் குரல் கம்மியது. கால் நூற்றாண்டு உழைப்பு ! ஒரு வார்த்தையில் உதறினார் .

               பாட்டிக்கும்  மற்றவர்களுக்கும் அந்த ஒரு வார்த்தை கூட வரவில்லை . வார்த்தைகள் இல்லாத சோகம் மிக கனமாக அனைவரின் நெஞ்சையும் அழுத்தியது. எதை கொண்டு செல்வது , விட்டு செல்வது. சுவர் சுவராக தடவிப் பார்த்தனர். பழங்கள் காய்த்து  தொங்கிய மரங்களை குழந்தைகள் கட்டிக் கொண்டன.... லக்ஷ்மம்மாவின் குழந்தைகள் விளையாட்டு சாமான்களை கட்டி கொண்டு விட மாட்டோம் என அழுதனர். தாத்தா  கனத்த இரும்பு பீரோவை திறந்தார். ( இக்க எப்புடு இதி தெரிசதி?) (இனி எப்போ இதை திறக்க?) கண்ணீரில் மசமசத்த கண்ணை துடைத்துக் கொண்டே பணத்தையும் , நகைகளையும் ஒரு துணியில் கட்டினார்.சுமக்க முடிந்த அளவு மிக முக்கியமான  உணவும் , மருந்தும் , துணிமணியும் கட்டி வைக்கப்பட்டன. அரிசி , பருப்பு மற்றும் மிக தேவையான பாத்திரங்கள் என  அவர்கள் இயந்திரங்கள் போலே இயங்கினர். தூரமாக தெரிந்த புகை மூட்டம் வேறெந்த சிந்தனையும் கொள்ள விடாமல் அவர்களை இயக்கியது!.

                    உள்ளே இருந்த கிருஷ்ணரின் படம் எடுத்து வரப்பட்டு நெல் குமியலில் சாய்த்து வைக்கப்பட்டது. பாட்டி பெரிய வெண்கல விளக்கை உள்ளிருந்து எடுத்து வந்து ஏற்றி வைத்தார் ! கிருஷ்ணரின் எதிரில் விழுந்து கும்பிட்ட பாட்டி  பெரிய கேவலுடன் கிட்னா !! கிட்னா !! என எழுந்து படத்தை கட்டிக்கொண்டார் . அது வரை அனைவரின் மனதிலும் அடக்கிய சோகம் எரிமலையாய்  பொங்க,  பெரியவர்கள் குழந்தைகள் பேதம் இன்றி மொத்த குடும்பமும் ஓடிசென்று கிருஷ்ணரின் மேல் விழுந்து கதறி அழுதது !

                       இவர்கள்  அழுகை சத்தம் கேட்டோ இல்லை அவற்றுக்கு புரிந்ததோ ??   ம்மா! ம்மா! ம்மா! கொட்டிலில் இருந்து மாடுகள் கதறின. கண்களில் நீர் பெருக அனைத்தும் கயிறை  இழுத்து படாத பாடு பட்டன .  வற்றாத பால்  கொடுத்து இந்த குடும்பத்தையும் , குழந்தைகளையும் காத்த அம்மாக்கள் ! அவற்றை அனாதையாக விட்டு செல்ல வேண்டி இருப்பதைதான் அவர்களால் தாங்க முடியவில்லை .  பாட்டி  ஓடி சென்று ஒவ்வொன்றையும் சேர்த்தணைத்து அழுதார்.
"நா தல்லி  எட்ல  உதுலுத்து ?" "என் அம்மா! எப்படி விட்டு செல்வேன்?"
கை நிறைய வைக்கோல் எடுத்து அவற்றுக்கு உதறி போட்டார் .
"ம்ம்ம்மமா"!! திரும்பி பார்க்காமல் காதை பொத்திக்கொண்டு கதறியவாறு வெளியேறினார் .





                குழந்தைகளை மட்டும் ஏற்றி கொண்டு செல்ல ஒரு வண்டி பூட்டப்பட்டது .
பாட்டியின் பிள்ளைகள்  பதினாறு பேரும்  பேரக்  குழந்தைகள் ஒன்பது
பேரும் , பெரியவர்களும் , சில வேலை ஆட்களுமாக  முப்பது  சொச்சம் பேர்  .



                                                                                                                                                 
 இத்தனை பேருக்கு நிழல் கொடுத்த வீடு , மாடுகள், சாப்பாடு போட்ட நிலங்கள், நிலம் நிறைந்த விளைச்சல், ஒரு வருடம் பாடுபட்டு எடுத்த நெல் , அத்தனையும் அப்படியே உதறி விட்டு ....

எப்படி மனம் வெந்து போயிருக்கும்? பிள்ளைகளை கொண்டு போய் பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும் . அது ஒன்று மட்டுமே அவர்களின் மனத்தில் இருந்தது .  அனைவரின் தலையிலும் சிறு சிறு துணி மூட்டைகள் .
லக்ஷ்மம்மாவின்  பெண்களில்  பெரியவள் அட்சம்மா , ஏழு வயதுக்கு தன்னை சுற்றி நடப்பதன் கனம்  புரிந்து அமைதியாக தன் துணி பையை தலையில் வைத்து கொண்டு , பாட்டியின்  கையை பற்றிக் கொண்டு நடந்தாள் .

"எப்புடு மன இட்டிகி திரிகி வோஸ்துமு?! "  எப்ப நம்ம வீட்டுக்கு திருப்பி வருவோம்?!
                     "ஒரேய், நா குர்ரம் பொம்மனு   மச்சம் கிந்த தாச்சி பெட்டினானு! மல்லி எதுகுட்டா!"  "டேய் ,என் குதிரை பொம்மையை கட்டில் அடியில ஒளிச்சு வச்சிருக்கேன் ! அப்புறம் வந்து எடுத்துக்கலாம் !"

பர்மிய நாட்டுக்குள் நுழையும் போது ஆயிரம் கனவுகளுடன் வந்த அவர்கள் நடை தளர்ந்து வெளியேறினர். தாய் நாட்டை நோக்கிய நெடும்பயணம் தொடங்கியது .
                         

No comments:

Post a Comment