Saturday, September 22, 2012

7. ரங்கூன் பாட்டி . PART - 2

                       
      அறுவடை முடிந்த  நெல் ரெண்டு  ஆள் உயரத்திற்கு  அங்கங்கு குவிக்க பட்டு இருந்தது.  சேர்த்து குமிச்சு வச்சா கைலாசநாதர் கரடு உயரம்  குமிக்கலாம் .ரெண்டு மூணு நாளாவே எல்லாரும் கூடி கூடி பேசுறாங்க! ஆம்பளையாளுங்க கூட அழுகிறாங்க !  பாட்டியின்  பெரிய பெண்  லக்ஷ்மம்மாவுடைய பிள்ளைகள் ஒன்பது பேரும் சின்ன குழந்தைகள் ! அதுங்க மட்டும் தான் சந்தோசமா விளையாடுது.தாத்தா  பாட்டிக்கு  மனசுக்குல எவ்வளவோ இருந்தாலும் வெளிய காமிச்சுக்காம இருக்காங்க.

பக்கத்து தோட்டத்தை சேர்ந்த பர்மியர்கள் நிறைய பேர் வந்து ஆறுதல் சொல்லி சென்றனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமாக ஆகிக் கொண்டு வந்தது.  ஜப்பானியர்கள் முன்னேறினர். பிரிட்டிஷ் - இந்திய படைகள் பின்வாங்கின.           



                              பசங்கள்ள அழகர் சாமி தான் பெரியவர் . இருபது சொச்சம்            
வயது....முன்னாலும்  பின்னாலுமாக பதினாறு பேர். இத்தனை பிள்ளைகளை பெற்று அவர்களை  நல்ல முறையில் வளர்த்து,  வயிறு வாடாமல் நேரத்திற்கு சமைத்து போட்டு, மிக   இக்கட்டான அந்த நிலையிலும் கலங்காமல் வளைய வந்த பாட்டியின் உறுதி எவ்வளவு என்று  கற்பனை செய்யக் கூட  முடியவில்லை .
                   "எய்யா அழகர்சாமி , தூத்தல் வொச்சட்ட வுந்தி , தொரக்க போயி கிடுகுலு பெண்டி ஒட்டுலுனு மூசிடுவுப்பா !" (சாரல் விழும்போல இருக்கு . சீக்கிரம் அந்த தட்டிய வச்சு நெல்லை மூடிருப்பா! ) , அம்மாவின் (பாட்டியின்)
குரல் கேட்டவுடன் பசங்க எல்லோருமே ஓடி வந்து அண்ணனுக்கு உதவி செய்தனர் .

       













      தாத்தாவும் , குருசாமியும் உள் அறையில் நெடுநேரமாக பேசிக் கொண்டு இருந்தனர். வெளியே வந்த இருவர் முகத்திலும் ஆயுசே இல்லை. குருசாமியை அனுப்பி விட்டு அடுப்படிக்கு வந்தார் .

"ம்ம்க்க்க்!"

"ஏமி , நீலு காவல?! " (என்ன தண்ணி வேணுமா?)

"இக்க ஏமி  லேதும்மா இக்கட ! " (இனி ஒண்ணும்  இல்லமா இங்க!)  தாத்தாவின் குரல் கம்மியது. கால் நூற்றாண்டு உழைப்பு ! ஒரு வார்த்தையில் உதறினார் .

               பாட்டிக்கும்  மற்றவர்களுக்கும் அந்த ஒரு வார்த்தை கூட வரவில்லை . வார்த்தைகள் இல்லாத சோகம் மிக கனமாக அனைவரின் நெஞ்சையும் அழுத்தியது. எதை கொண்டு செல்வது , விட்டு செல்வது. சுவர் சுவராக தடவிப் பார்த்தனர். பழங்கள் காய்த்து  தொங்கிய மரங்களை குழந்தைகள் கட்டிக் கொண்டன.... லக்ஷ்மம்மாவின் குழந்தைகள் விளையாட்டு சாமான்களை கட்டி கொண்டு விட மாட்டோம் என அழுதனர். தாத்தா  கனத்த இரும்பு பீரோவை திறந்தார். ( இக்க எப்புடு இதி தெரிசதி?) (இனி எப்போ இதை திறக்க?) கண்ணீரில் மசமசத்த கண்ணை துடைத்துக் கொண்டே பணத்தையும் , நகைகளையும் ஒரு துணியில் கட்டினார்.சுமக்க முடிந்த அளவு மிக முக்கியமான  உணவும் , மருந்தும் , துணிமணியும் கட்டி வைக்கப்பட்டன. அரிசி , பருப்பு மற்றும் மிக தேவையான பாத்திரங்கள் என  அவர்கள் இயந்திரங்கள் போலே இயங்கினர். தூரமாக தெரிந்த புகை மூட்டம் வேறெந்த சிந்தனையும் கொள்ள விடாமல் அவர்களை இயக்கியது!.

                    உள்ளே இருந்த கிருஷ்ணரின் படம் எடுத்து வரப்பட்டு நெல் குமியலில் சாய்த்து வைக்கப்பட்டது. பாட்டி பெரிய வெண்கல விளக்கை உள்ளிருந்து எடுத்து வந்து ஏற்றி வைத்தார் ! கிருஷ்ணரின் எதிரில் விழுந்து கும்பிட்ட பாட்டி  பெரிய கேவலுடன் கிட்னா !! கிட்னா !! என எழுந்து படத்தை கட்டிக்கொண்டார் . அது வரை அனைவரின் மனதிலும் அடக்கிய சோகம் எரிமலையாய்  பொங்க,  பெரியவர்கள் குழந்தைகள் பேதம் இன்றி மொத்த குடும்பமும் ஓடிசென்று கிருஷ்ணரின் மேல் விழுந்து கதறி அழுதது !

                       இவர்கள்  அழுகை சத்தம் கேட்டோ இல்லை அவற்றுக்கு புரிந்ததோ ??   ம்மா! ம்மா! ம்மா! கொட்டிலில் இருந்து மாடுகள் கதறின. கண்களில் நீர் பெருக அனைத்தும் கயிறை  இழுத்து படாத பாடு பட்டன .  வற்றாத பால்  கொடுத்து இந்த குடும்பத்தையும் , குழந்தைகளையும் காத்த அம்மாக்கள் ! அவற்றை அனாதையாக விட்டு செல்ல வேண்டி இருப்பதைதான் அவர்களால் தாங்க முடியவில்லை .  பாட்டி  ஓடி சென்று ஒவ்வொன்றையும் சேர்த்தணைத்து அழுதார்.
"நா தல்லி  எட்ல  உதுலுத்து ?" "என் அம்மா! எப்படி விட்டு செல்வேன்?"
கை நிறைய வைக்கோல் எடுத்து அவற்றுக்கு உதறி போட்டார் .
"ம்ம்ம்மமா"!! திரும்பி பார்க்காமல் காதை பொத்திக்கொண்டு கதறியவாறு வெளியேறினார் .





                குழந்தைகளை மட்டும் ஏற்றி கொண்டு செல்ல ஒரு வண்டி பூட்டப்பட்டது .
பாட்டியின் பிள்ளைகள்  பதினாறு பேரும்  பேரக்  குழந்தைகள் ஒன்பது
பேரும் , பெரியவர்களும் , சில வேலை ஆட்களுமாக  முப்பது  சொச்சம் பேர்  .



                                                                                                                                                 
 இத்தனை பேருக்கு நிழல் கொடுத்த வீடு , மாடுகள், சாப்பாடு போட்ட நிலங்கள், நிலம் நிறைந்த விளைச்சல், ஒரு வருடம் பாடுபட்டு எடுத்த நெல் , அத்தனையும் அப்படியே உதறி விட்டு ....

எப்படி மனம் வெந்து போயிருக்கும்? பிள்ளைகளை கொண்டு போய் பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும் . அது ஒன்று மட்டுமே அவர்களின் மனத்தில் இருந்தது .  அனைவரின் தலையிலும் சிறு சிறு துணி மூட்டைகள் .
லக்ஷ்மம்மாவின்  பெண்களில்  பெரியவள் அட்சம்மா , ஏழு வயதுக்கு தன்னை சுற்றி நடப்பதன் கனம்  புரிந்து அமைதியாக தன் துணி பையை தலையில் வைத்து கொண்டு , பாட்டியின்  கையை பற்றிக் கொண்டு நடந்தாள் .

"எப்புடு மன இட்டிகி திரிகி வோஸ்துமு?! "  எப்ப நம்ம வீட்டுக்கு திருப்பி வருவோம்?!
                     "ஒரேய், நா குர்ரம் பொம்மனு   மச்சம் கிந்த தாச்சி பெட்டினானு! மல்லி எதுகுட்டா!"  "டேய் ,என் குதிரை பொம்மையை கட்டில் அடியில ஒளிச்சு வச்சிருக்கேன் ! அப்புறம் வந்து எடுத்துக்கலாம் !"

பர்மிய நாட்டுக்குள் நுழையும் போது ஆயிரம் கனவுகளுடன் வந்த அவர்கள் நடை தளர்ந்து வெளியேறினர். தாய் நாட்டை நோக்கிய நெடும்பயணம் தொடங்கியது .
                         

Thursday, September 20, 2012

6. ரங்கூன் பாட்டி !! Part-1

ரங்கூன் பாட்டி - சிலரின் பெயரை சொல்லும் போதே அவர்களின் அன்பையும் பிரியத்தையும் நாம் சேர்ந்து உணர்வோம் . இந்த பெயர் அப்படிப்பட்ட ஒரு உணர்வை எங்கள் எல்லோருக்கும் தரும் .


இங்கிருந்த சொத்துக்களை பராமரித்துக்கொள்ளுங்கள் என்று சொந்தங்களிடம் விட்டு விட்டு பர்மாவுக்கு சென்ற அந்த தம்பதியை அந்த தேசம் அணைத்துக்கொண்டது . மிக கடினமான உழைப்பு , இயற்கை என்று எல்லாம் துணை செய்ய மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்தனர்.
பதினாறும் பெற்ற பெரு வாழ்வு . ஆமாம் ,மொத்தம் பதினாறு குழந்தைகள்.



















           வீட்டில் பெண்கள் சமைத்து கொண்டே இருக்க வேண்டும் . வேலை ஆட்களும் குழந்தைகளும் , தொழுவம் நிறைந்த மாடுகளும் என எப்போதும் திருவிழாதான்.
மீன்  வேணுமா?  "எய்யா !!அழகர்சாமி !! போயி கொச்சம் மீனு எதுகு ராயா !!( போய்  கொஞ்சம் மீன் எடுத்துட்டு வாப்பா !) பாத்திரத்தோடு வயலுக்கு சென்றால் நெல்வயலில் தேக்கிய நீரில் இருந்து வேணுமான அளவு மீன் வீட்டுக்கு வந்து விடும்! நீரும் நீருடன் இணைந்த வாழ்வும் அற்புதமாக இருந்தது .

            ரங்கூன் பாட்டி  ( நங்கள் பார்த்த போது தான் பாட்டி . இந்த இடத்தில் நடு  வயதுதான். ஆனால் இப்படி கூப்பிட்டால்தான் என்னால் கதை சொல்ல முடியும்)  தன்  மூத்த மகள் லக்ஷ்மம்மாவை தன்  தம்பிக்கு திருமணம் செய்து வைத்தார் . எல்லோரும் கூட்டு குடும்பமாக  மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.



             வயலில்  காய்கறிகளும் நெல்லும் மூட்டை மூட்டையாக விளைந்தது!  தங்களின்  வேலையாட்களுக்கும் பங்கிட்டு அளித்தனர்.போரும் புரட்சியும் ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களின் நல்ல நேரம் சில சின்ன பெரிய சங்கடங்கள் தவிர வேறு  இடையூறுகள்  இல்லை.

              அந்த நாள்  1946 இன் கடைசி மாதத்திலோ   1947 இன் முதல் மாதத்திலோ  இருக்க வேண்டும் .பக்கத்து தோட்டத்தில் இருந்து குருசாமி இவங்க வீட்டுக்கு வந்து  கதவை தட்டும் போது  நட்ட நடு நிசி . மிக பதட்டமாக இருந்தார் . கைகள் விடாது நடுங்கியவாறு இருந்தது! அவரை பெரும்பாடுபட்டு சமாதானம்  செய்ய வேண்டிஇருந்தது ...   "எண்ணா !!ஒதினே !!  நாம  மோசம் போயிட்டோம் !! என திடீரென தலையில் அடித்துக்கொண்டு அழ  ஆரம்பித்து விட்டார் .

               "ஒய் !!குருசாமி  என்னப்பா தங்கச்சிக்கு உடம்பு எதனா
சௌக்கியமில்லையா ??"

           எண்ணா !! இப்ப  "யோங்கோன் " னும் அவன் சம்சாரமும் வீட்டுக்கு வந்து ஒரு தகவல் சொல்லிட்டு போனாங்க ! அவன்  முதலாளி  அரசாங்கத்துல முக்கியமான ஆளு .சப்பான்காரன் உள்ள பூந்த இந்த நேரத்த சாக்கா வச்சு  நம்மள அடிச்சு விரட்ட இவனுங்க ஒரு திட்டம் போட்ட மாதிரி இருக்காம் ! சப்பான்காரனும் அநேகமா குண்டு போடுவான் போல இருக்காம் !  பிள்ள குட்டிங்கள வச்சுகிட்டு என்ன செய்ய போறோம்னு ஒன்னியும் புரியலண்ணே!!சின்ன பிள்ளை போல விசும்பி அழுதார்.
 பெண்கள் குரல் எடுத்து அழ ஆரம்பித்தனர்.   சத்தம் கேட்டு எழுந்த குழந்தைகள் அரைகுறை தூக்கத்தில் கத்த ஆரம்பித்தனர். ஒரே அதட்டல் போட்டார் தாத்தா ..

           "இப்புடு ஏமிட்டிகி  ஈ  கூத்தலு !! (இப்ப ஏன் இப்படி கத்துறிங்க ?)
 இது என்னைகின்னாலும் வரும்னு தெரிஞ்சதுதானே !!
கேளு  குருசாமி !!, யோங்கோன் சொல்றதை நாம முழுசும் நம்ப முடியுமா?  ன்னா  முடியாது!!

       ஆனா   உள்ளூர் ஆளுங்களுக்கு  வன்மம் இல்லேன்னு நினைக்க,  நாம ஒன்னும் பச்ச குழந்தைங்க இல்லே! எங்க இருந்தோ வந்தவங்க கிட்ட கூலியாளா இருக்கிறது ஒவ்வொருத்தன் மனசுலயும் இருக்கும்!! எங்கயும் இருக்கிறதுதானே ?!! இது வரைக்கும் நாம  தெளிவா இருந்தது பெரிய விஷயம் இல்லே !!இனிமேட்டு தான்  ரொம்ப தெளிவாவும் தைரியமாவும் இருக்கணும் . அத விட்டுட்டு  அழுதா எப்பிடி?

          விவேகத்துடன் அவர் பேசியவுடன் அனைவரின் முகத்திலும் தெளிவு வந்தது . கண்ணை துடைத்துக்கொண்ட குருசாமி ,"  நீங்க சொன்ன மாரி   ஒக்காந்து அழுதா தீந்து போகும்னா இன்னிக்கு பூரா அழுகலாம் !! ஆனா  நம்ம சுமைய நாமதான சொமக்கணும் !! காலையில நம்ம ஆளுகளை  கூட்டிட்டு வரேண்ணே . பேசலாம்" என்று விட்டு  தளர்வுடன் வெளியேறினார் .
கனத்த மனதுடனும் ,இனம் புரியாத பயத்துடனும் ஆளுக்கு ஒரு மூலையில் முடக்கிக் கொண்டனர்.

சிறு வயதில் பெரியவர்கள் செய்யும் சில விசயங்கள் இப்போது நினைவில் வருகிறது !! ஏதாவது கஷ்டத்தில் மனசு மிக சலனப்படும் போது  அவர்கள் தினப்படி வேலையுடன்  மிக ஒன்றி கவனத்துடன் , செயல்படுவதை கவனித்து இருக்கிறேன். அது ஏன்  என இப்போது தெளிவாக புரிகிறது. முடிவெடுக்க முடியாத ஒரு பிரச்னை வரும்போது தியானம் செய்ய சொல்லி இப்போதைய CARPORATE குருமார்கள் சொல்வதை அவர்கள் போகிற போக்கில் செய்துள்ளனர்! 



     



















                             பாட்டி வெள்ளனே எழுந்து குளித்து சூரியனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு ,வெண்கல விளக்கையும்  , பூஜை சாமான்களையும்  பளபளவென தேய்த்து துடைத்தார் . வீட்டில் இருந்த மிகப்பெரிய கிருஷ்ணர் படத்தின் முன் அதை வைத்து விளக்கேற்றி விட்டு விழுந்து கும்பிட்டார். கண்களில் நீர் குளம் கட்டியது. இரு கையை கூப்பி ,
"ஏமி அவ்வினானு சூஸ்தமுரா  கிட்ணா! ,நுவ்வு மட்டு மா கூடனே வுண்டு! (என்ன ஆனாலும் பாக்கலாம்டா  கிருஷ்ணா! நீ மட்டும் எங்க கூடவே இரு!)


கிருஷ்ணரை துணைக்கு அழைத்த பாட்டியின் பயணம் அதன் பின் நிற்கவே இல்லை !





Wednesday, September 12, 2012

5. சுந்த்ராஜும் , நேருவும் !!!

                   கால் மாற்றி கால் மாற்றி நின்றார். மனசு ஆற மாட்டேங்குது . ஒருத்தருக்கும் இவர் தவிப்பு புரியல்ல!  இல்லன்னா ,"நீயும் வா. கொஞ்ச நேரந்தானேனு  கூப்பிட்டிருப்பாங்கல்ல ? ."   "ஒரு மணி நேரத்தில இங்க  கொள்ள போறதுக்கு என்ன இருக்கு ? அடகு வச்ச ரெண்டு பிஞ்சு போன மூக்குத்தி ,கம்மலும், நாலு ரெட்டை வட செயினும்தான் இருக்கு . இதுக்கு ஒரு காவக்காரன்தான் கேடு ."

                   











                  சுந்தரராஜன் கிராம கூட்டுறவு வங்கிக்  காவலாளி .  ஜவஹர்லால் நேருவை வரவேற்க ஜில்லாவே ஒரு வாரமாக ஒரே கொண்டாட்டமாக இருந்தது . வங்கி ஊரின் எல்லையில் இருப்பதால் காவல் அவசியம் . இவருக்கு வேலையில் சேர்ந்த புதிது . அதனால் தனக்கு அன்று வேலை நாள் ,தான் வேலைக்கு சென்றாக வேண்டும் என்று தோணவேயில்லை. காலையில் கணக்குபிள்ளை கூப்பிட்டனுப்பி ,
" ஏய் ! சுந்த்ராஜு ! நீ பாட்டுக்க நேரை பாக்கறேன் ! கீரை பாக்கரேன்ட்டு போயிராதப்பு ! பிரசெண்டு நாயிக்கரு பிச்சுப்புடுவாரு !அம்புட்டுதான் சொல்லுவேன் . ஆமா !!""

               கணக்கப்பிள்ளை சொன்ன பிரசெண்டு நாயக்கரின் பெயரும்
சுந்தரராஜன் தான் ! நம்ம போத்தி  நாயக்கரின் சின்ன அல்லுடு !(மருமகன்) அவரின் காலம் மட்டும் அவர்தான் பிரசிடென்ட் ஆகவும், ஜில்லா கவுன்சிலர் ஆகவும் மாற்றி மாற்றி இருந்தார்.   அவர் உயரமும் , ஆகிருதியுமாக தெருவில் வரும்போதே படியில் உட்கார்ந்து வெட்டி கதை பேசுபவர்கள் எல்லாம் மெல்ல வீட்டினுள்ளும் , பக்கத்து சந்திலும் புகுந்து விடுவார்கள்.. கம்பீரமான தன் சத்தத்திலேயே எதிராளியை   சாய்த்து விடுவார் .

                        நம்ம  சுந்த்ராஜுக்கு ஆறவேயில்லை !  உள்ளே உதறினாலும் நேரே சுந்தரராஜ நாயக்கரிடம் போய்  விட்டார்.!

#ஏமிரா ? *# ...............#எண்ணா !!!....*#    .......#செப்பு ஏமி ? *# .......#.ஏமி  ரேது!*#
என்னடா?                     அண்ணே!                      என்ன சொல்லு?       ஒண்ணுமில்லே!


" பின்ன என்ன ? போ !! போயி இரு ! ஊர் பக்கம் வேடிக்க பாக்க வந்துராதே!''

''செரிண்ணா !!''   பேசாம வாயை  மூடிக்கொண்டு  வந்து  விட்டு  இப்போது புலம்பித் தவித்துக் கொண்டிருந்தார் .

(""இந்த இடத்தில திருப்பி முதல் பாராவ படிங்க ")

நன்கு இருட்டிவிட்டது . யாராவது வந்து தன்னை அழைப்பார்கள் என ஒரு மூலையில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும்  போய் விட்டது. இனி என்னத்த என்று எரிச்சலுடன் வாசலில் இருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார் . இனி அவரின் வார்த்தைகளில் .............

                                     "மூணு  பிளசர் வண்டி  சர்ர்ருன்னு போச்சு. எனக்கா வயத்தெரிச்சல் ! இருந்திருந்து  எப்படியாப்பட்ட ஒரு ஆளு ஊருக்கு வர்றாரு ! நா  பொறந்த நேரம் சரி இல்ல! இல்லன்னா அங்க அப்படி கேவலப்பட்டு உக்காருவனா ?'' அதனால போன பிளசர் காரை திரும்பி கூட பாக்கலை . அப்பிடியே  உட்கார்ந்தவன்  அரவம் கேட்டு நிமிந்து பார்த்தா அங்க வந்து நின்ன பிளசர்ல இருந்து வளத்தின்னா வளத்தி அப்படி ஒரு வளத்தி , கருப்புன்னா கருப்பு அப்பிடி ஒரு கருப்பு , நேரா என்ன பாத்து வந்தவர பாத்து  எனக்கே தெரியாம எந்திருச்சு நின்னுட்டேன் !!

"தம்பி இங்கன ஒதுங்க இடம் இருக்கு?'' !

 "ஆமா ,பின்னாடி இருக்கு ! ''

அவர் பின்னாடி திரும்பி வண்டிய பார்த்து  தலையை ஆட்டி ஜாடை காமிச்சார் .

            அவ்வளவுதா!!, வண்டியில இருந்து சும்மா சாட்டை மாதிரி எறங்கி வராரு!!  பார்த்த உடனே எனக்கு ஜொரம் வந்துருச்சு ! தீ மாதிரி இருக்கறாரு !! சாமி மாதிரி கிட்ட வந்து நிக்கிறாரு!! அவர   பின்னாடி கூட்டிட்டு போனது, கக்கூஸ் கதவு திறந்து விட்டு வாளியில தண்ணி மொண்டு வச்சது , போறப்ப அவரு என்ன முதுகில தட்டிட்டு போனது , மொதல்ல வந்து பேசுன வளந்தவரு சிரிச்சதுனு எல்லாமே
நிமிசமா முடிஞ்சு போச்சு!


 மின்னாடி  போன வண்டி எல்லாம் பின்னுக்கயே (reverse )கிட்ட வந்துருச்சு . 

எல்லா வண்டியும் ஊர் பக்கமா கிளம்பி போனப்பறம் என்னால தரையில நிக்க முடியல !!

"சாலுரா சுந்த்ராஜு , இக்க ஏமிரா ஈ பத்துகுல "னு (போதும்டா  சுந்த்ராஜு, இனி என்னடா வேணும் இந்த பிறவியில)  ஆகிபோச்சு .


 ( இந்த கதையை முதலில் சொன்ன  போது சுந்தராஜ் தாத்தாவின்  வயது 60 க்கு மேல் .என் வயது 10அல்லது 12 தான்.ஆனால் எத்தனை தடவை இந்த கதையை கேட்டேன் என்பது என் நினைவில் இல்லை . கல்லூரியில் படிக்கும் போது கூட,  ஒரு தடவ ''அவரை பார்த்த  கதையை சொல்லுங்க'' ன்னு கேட்டிருக்கிறேன் .')


            எப்போது அவர் இந்த கதை சொன்னாலும் சொல்லி முடித்தவுடன் கேட்பார் !  "செப்பு நுவ்வு நிஜம் அண்டவா? ரேதா? (சொல்லு நீ நிஜம்னு சொல்றியா ?இல்லையா?) என்பார். பக்கத்தில் கேட்கும் பெரியவர்கள் நக்கலாக சிரிப்பார்கள் . பாவம்  யாருமே அவர்  சொல்வதை கடைசிவரை ஒத்து கொள்ளவேயில்லை .  ஆனால் அவரும் சளைக்கவில்லை . வருத்தப்படவும் மாட்டார் .

             அப்பாவிடம் சொன்னேன் ,"நிஜமாதான்பா இருக்கும் !".
 அப்பா சிரித்துக்கொண்டார் .

                  ஆனால் எனக்கு உண்மை என்றே தோன்றுகிறது.
நேருவிடமும், காமராஜரிடமுமா  போய் கேட்க முடியுமா ? கேட்கவே முடிந்தாலும்  எப்படி கேட்பது!!! ?